முசிறி அருகே உள்ள சேர்குடி மேற்கு ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 65). இவர் தனது விவசாயத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு கிளம்பினார் . வழக்கம்போல் வீட்டை பூட்டி சாவியை வீட்டின் பின்பக்க ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டு தோட்டத்துக்கு புறப்பட்டார். அரை மணி நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது. வெளியே சென்றிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் வீடு திரும்பும் போது சாவி இல்லாமல் வெகு நேரம் வெளியே காத்திருக்க வேண்டிய நிலையை தவிர்ப்பதற்காக கிராமங்களில் சாவியை வெளியே வைத்துவிட்டு செல்வது வழக்கம். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீடு புகுந்து திருடி சென்று விட்டார். இதுகுறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
