Rock Fort Times
Online News

திருச்சி கோட்டை பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்… ஓராண்டில் முடிக்க திட்டம்…!

திருச்சி மாரிஸ் தியேட்டர் அருகே கோட்டை ஸ்டேசன் ரயில்வே மேம்பாலம் கடந்த 1866ம் ஆண்டு கட்டப்பட்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தில்லைநகர் மற்றும் உறையூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் இந்த பாலத்தின் வழியாக சென்று சத்திரம் பேருந்து நிலையத்தை அடைந்தன.
பாலம் கட்டி 157 ஆண்டுகள் கடந்து விட்டதாலும், போக்குவரத்து அதிகரித்ததால் பாலம் வலுவிழந்ததாலும் புதிய பாலம் கட்ட தெற்கு ரயில்வே மற்றும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இணைந்து 50:50 என்ற நிதி பகிர்மான அடிப்படையில் பாலத்தை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.34.10 கோடி மதிப்பில் நகர் ஊரமைப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ் நிதியுதவி பெற்று ரயில்வே நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இத்திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகிறது. புதிதாக கட்டப்படவுள்ள இருவழிபாதை ரயில்வே மேம்பாலம் 31.39 மீட்டர் நீளம், 20.70 மீட்டர் அகலத்தில் அமைகிறது. ரயில்வே பாலத்தின் கிழக்கு பகுதியில் 223.75 மீ. நீளமும், 15.61 மீ. அகலம் கொண்டதாகவும், மேற்கு பகுதியில் 225 மீ.நீளமும், 15.61மீ அகலத்தில் சாலையில் மையத்தடுப்புடன் அமைக்கப்படுகிறது. இப்பாலம் இருவழிப்பாதையாக அமைக்கப்படுவதால் மெயின்கார்டுகேட் பகுதியில் இருந்து தில்லைநகர், தென்னூர், புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளுக்கு வாகனங்கள் இடையூறின்றி எளிதாக சென்றுவர முடியும். இத்திட்ட பணியானது ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இந்நிலையில் பாலம் கட்டும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தற்போது வேகத்தை அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பாலத்தின் பக்கவாட்டில், சாலை ரோடு தொடங்கும் பகுதிகளில் இருந்து கூடுதல் மண்ணை அப்புறப்படுத்தி அஸ்திவாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், சாலையின் இருபுறங்களிலும் உள்ள மின் கம்பங்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அவற்றை அப்புறப்படுத்தும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பாலம் அமைந்தால் இப்பகுதியில் நீண்ட காலமாக இருந்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கும் விடிவு காலம் பிறக்கும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்