தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், இதில்தான் அரசுக்கு அதிக அளவு வருமானம் வருவதால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மட்டும் அரசு மூடி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு மதுபான பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து மது குடிப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்யான தகவல். இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. கடந்த 4-ந் தேதியன்று தெலுங்கானாவை சேர்ந்த சமூக ஊடக பக்கங்களில் இந்த வீடியோ பதிவிடப்பட்டது. வீடியோவில் உள்ள தெலுங்கு எழுத்துகளை மறைத்து தமிழ்நாட்டில் நடந்தது என திரித்து பரப்பப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
Comments are closed.