வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தும் அவரது கட்சியில் யாரும் இணையவில்லை. அதனால் சட்டமன்றத் தேர்தலை தமிழக வெற்றிக் கழகம் தனித்தே சந்திக்கிறது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு விறுவிறுப்பாக நடந்தது. இதற்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று(27-03-2026) வெளியிடப்படும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மாமல்லபுரத்தில், விஜய் தலைமையில் நடக்கவுள்ள கூட்டத்தில், முதற்கட்டமாக 110 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தபட இருந்ததாக தகவல் வெளியானது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் சென்னைக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் அனுமதி அளிக்கப்படாததால் கூட்டத்தை ஒத்திவைக்கப்படுவதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள்( ஞாயிற்றுக்கிழமை) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்த அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் அனைவரையும் விஜய் முறைப்படி அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.