Rock Fort Times
Online News

டீக்கடை உரிமையாளரரை கொலை செய்த தொழிலாளி 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது திருச்சி நீதிமன்றம்

திருச்சியில் டீக்கடை உரிமையாளரை கட்டையால் தாக்கி கொலை செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி, மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் சோமசுந்தரம் (45). இவர் பொன்மலைப்பட்டி புறக்காவல் நிலையம் அருகே டீ கடை நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் பொன்மலைப்பட்டி பாரதிதாசன் தெருவை சேர்ந்த பிரபாகரன் (33) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிபழக்கம் கொண்ட பிரபாகரன், அடிக்கடி வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். கடந்த 2019ம்ஆண்டு ஜூலை மாதம் கடைக்கு செல்லாமல் விடுப்பில் சென்ற, பிரபாகரன் மதியம் ஒரு மணியளவில், மதுபோதையில் சோமசுந்தரத்தின் டீக்கடைக்கு வந்து, மேலும் மதுக்குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தரமறுத்த சோமசுந்தரம், பிரபாகரனை அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளார்.  இரவு மீண்டும் கடைக்கு வந்த பிரபாகரன், கடை உரிமையாளர் சோமசுந்தரத்திடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் டீக்கடை வாசலில் குவிக்கப்பட்டிருந்த விறகு கட்டையை எடுத்து சோமசுந்தரத்தின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் சோமசுந்தரம் பலத்த காயமடைந்தார். டீக்கடையில் டீ மாஸ்டராக இருந்த நயினார் காஜா என்பவர் தடுக்க முயன்றபோது, பிரபாகரன் அவரையும் தாக்கியுள்ளார். இதில் நயினார் காஜாவும் காயமடைந்தார். காயமடைந்த இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சோமசுந்தரத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நயினார் காஜா மட்டும் சிகிச்சைக்கு பின்னர் குணமானார்.  இச்சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட 2வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி விசாரணை முடிந்து நேற்று (அக்-17) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், கொலை குற்றத்தில் ஈடுபட்ட பிரபாகரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5,000 அபராதமும் கட்டத்தவறினால், மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சரவணன் தீர்ப்பளித்துள்ளார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞர் பாலசுப்ரமணியம் ஆஜரானார்.

திருச்சி வந்த தமிழக ஆளுநருக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..

1 of 881

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்