திருச்சியில் தொடர்ந்து நடக்கும் அக்கப்போர்: அரசு பேருந்து நடத்துனரை தனியார் பேருந்து ஓட்டுனர் தாக்கியதால் பரபரப்பு… ( வீடியோ இணைப்பு)
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து உள்ளூர் மற்றும் பிற மாவட்டங்களுக்கு நகர பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு பேருந்து நிலையங்களிலும் பேருந்துகளை இயக்குவதில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. பேருந்துகளை இயக்குவது தொடர்பாக நேர கட்டுப்பாடு இருந்தாலும் அதனை சரியாக கடைபிடிக்காததால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருச்சி, மலைக்கோட்டை பணிமனையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று(09-12-2024) சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கோஹினூர் சிக்னலை கடந்து சென்றபோது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து கோகினூர் சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்தும் சிக்னலை மதிக்காமல் கடந்து சென்றபோது இரண்டு பேருந்தும் லேசாக உரசி கொண்டன. இதனால், இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது தனியார் பேருந்து ஓட்டுனர் தினகரன், அரசு பேருந்து நடத்துனர் செந்தில்வேலை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த செந்தில்வேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். மேலும், தனியார் பேருந்து ஓட்டுநர் தினகரனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கும், அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே இது போன்ற மோதல் அடிக்கடி நடக்கிறது. இதற்கு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.