மார்ச் 31ம் தேதி வரை திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும், யாரும் வெளியே வராதீங்க! * வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக இன்று (மார்ச் 27) முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் எனவும், ஓரிரு இடங்களில் 105 டிகிரி வரை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும்.ஆனால் தற்போது மார்ச் மாதமே வெயிலின் கோரத்தாண்டவம் தொடங்கிவிட்டது. நேற்று ஈரோடு, கரூர், மதுரை, வேலூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 101.48 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 31-ந்தேதி வரையில் அதாவது, அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 102.2 டிகிரி முதல் 105.8 டிகிரி வரை பதிவாகக் கூடும் என சொல்லப்படுகிறது.இதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலியில் 98 டிகிரி முதல் 102.2 டிகிரி வரை பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 98 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 102 டிகிரிக்கு மேல் பதிவாகக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.