Rock Fort Times
Online News

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி விறு…விறு… 2 காளைகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் பரபரப்பு…!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில்  புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (04-01-2025) தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது புதுக்கோட்டை கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், வட்டாட்சியர் எஸ்.விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா, வாடிவாசல் மற்றும் காளைகள் ஓடுதளம், காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வரும் வழி, பார்வையாளர்களின் மாடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை வழங்கினார். பின்னர், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக உறுதிமொழி வாசித்தார். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 600 ஜல்லிக்கட்டு காளைகளும், அதனை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்கள் சுமார் 300 பேரும் கலந்து கொண்டுள்ளனர். கால்நடைத் துறை மருத்துவர் மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதித்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் வாடி வாசலில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை மைதானத்தில் நின்ற மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். வீரர்களின் பிடியில் ஒரு சில காளைகள் சிக்கின. பெரும்பாலான காளைகள் வீரர்களின் பிடியில்  சிக்காமல் ஓடின. ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இரண்டு காளைகள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், ஒரு ஜல்லிக்கட்டு காளை காயம் அடைந்தது.  அந்த காளைக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் கோ.சுகுமார் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்புத் துறை (பொ) நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்