திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா தர்கா பழைய குட்செட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷபிக்(வயது 47). இவரும், நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவில் வெற்றிலை கடையில் வேலை பார்க்கும் அரியமங்கலம் சலீம் என்பவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சலீம், பள்ளி வாசலுக்கு வந்தவர்களிடம் பிரச்சினை செய்ததாகவும், இதனை ஷபிக் தட்டி கேட்டதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுடைய இடையே ஏற்பட்ட தகராறில்
ஷபிக், சலீமை தள்ளி விட்டதில் கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்தபோது சலீம் இறந்து விட்டது தெரிய வந்தது. பின்னர், சம்பவ இடத்திற்கு மலைக்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் கோபால் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பின்னர், சலீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.