Rock Fort Times
Online News

முசிறி அருகே நள்ளிரவில் பயங்கரம்:- கட்டிலில் தூங்கிய பட்டதாரி வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை…!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (26) என்ற மகன் மற்றும் ஒரு மகள் என இரு குழந்தைகள். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மகள் சென்னையில் படித்து வருகிறார். கோபிநாத், டிப்ளமோ படித்து விட்டு தோட்டத்தில் விவசாய வேலைகள் பார்த்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான வீடு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, அம்பாயிபாளையம் கிராமத்தில் உள்ளது. பாலசுப்ரமணியம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் செல்வியும், கோபிநாத்தும் முசிறி பகுதியில் தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வந்தனர். இந்நிலையில்கோபிநாத், நேற்று (20-04-2025) இரவு கிராமத்தில் வயலில் உள்ள வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து தூங்கினார். நள்ளிரவில், அவரது தாயார் செல்வி வெளியே வந்து பார்த்தபோது கட்டிலில் தனது மகன் கோபிநாத் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்- இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கரிக்கட்டையாகக் கிடந்த கோபிநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சியில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வாலிபர் கோபிநாத் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்?,எதற்காக கொலை செய்தனர்? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் முசிறியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்