Rock Fort Times
Online News

ஈரோட்டில் பயங்கரம்: ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக்கொலை- தப்பி ஓடிய 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்…!

சேலத்தைச் சேர்ந்தவர் ஜான். ரவுடியான இவர் தனது மனைவியுடன் திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கில் ஜாமீனில் வந்து கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். இவர், மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்றபோது ரவுடி ஜானை காரில் துரத்திய கூட்டம், விபத்தை ஏற்படுத்தி வெட்டி சாய்த்தது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜானை பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்தக் கொலையை அரங்கேற்றிவிட்டு சென்றது தெரிய வந்தது. அவர்களை போலீசார் விரட்டிச் சென்றனர். அப்போது அந்த கும்பல் வேகமாக தப்பி சென்றது. அப்போது அவர்களில் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இவர்களுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தப்பி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்