தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழாவையொட்டி இன்று 20-04-2024 தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக கடந்த 6ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் சாமி வீதியுலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. தஞ்சை மேலவீதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் தியாகராஜ சுவாமி, கமலாம்பாள் எழுந்தருளினர். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேகப் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், நாதஸ்வரம் என பாரம்பரிய இசை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருப்பதால் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோடைகாலம் என்பதால் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர், நீர்மோர் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி தஞ்சைக்கு சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தஞ்சையில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.