Rock Fort Times
Online News

தஞ்சை பெரிய கோயிலின் சித்திரை தேரோட்டம் கோலாகலம்!

தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 17-ம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று ( 01.05.2023 )காலை துவங்கியது. பெரிய கோயிலின் அருகில் உள்ள மேல வீதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், தியாகராஜ சுவாமியும் , அம்மனும் எழுந்தருளிய நிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து  தேரோட்டத்தினை தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாரை தப்பட்டை, நாதஸ்வர இசையுடன் பாரம்பரிய இசை முழங்க பல்லாயிரக்கணக்கான சிவ பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். மேல வீதியில் துவங்கிய திருத்தேர் கொங்கனேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதி ரத்தினபுரீஸ்வரர் கோயில், கீழராஜ வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு ராஜ வீதிகளின் வழியாக சென்று மீண்டும் மேல வீதியில் நிலைக்கு வந்தடையும். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் சார்பில் தண்ணீர், நீா்மோர் வழங்கியதோடு அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்