Rock Fort Times
Online News

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் உள்ளது…* தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் …!

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. இந்த கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஒரே கட்டமாக விஜய் நேற்று அறிவித்தார். சென்னை, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இந்தநிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று(மார்ச் 30) தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து ஊர்வலமாக சென்ற அவர், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில்,

“நம்மைப் பிடித்தவர்கள் உள்ள இடத்திலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என நினைத்தேன். தமிழகமே எனக்குப் பிடித்த இடம்தான். அதனால், தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பிரச்சாரத்தைத் தொடங்கலாம். ஆனால் நம் வீட்டின் வாசலில் இருந்து, நம் தாய் வீட்டிலிருந்து தொடங்குவது போல், பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்தேன், அதனால் இங்கு பெரம்பூரில் இருந்து தொடங்குகிறேன். தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது., பெண்களுக்கு பாதுகாப்பில்லாத, ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இதற்கு ஒன்றுக்கும் உதவாத திமுக ஆட்சிதான் காரணம். இப்படிப்பட்ட ஆட்சி நடத்திய ஸ்டாலின் இத்தேர்தலோடு விடைபெறப் போகிறார். நம் வீட்டுப் பெண் பிள்ளைகள், இரவில் கழிவறை செல்லக் கூட முடியவில்லை, மூதாட்டியைக் கூட விட்டு வைப்பதில்லை. டீக்கடையில் டீ குடிக்கச் சென்றால் கூட போதை ஆசாமிகள் வெட்டு, குத்துக்கு மக்கள் ஆளாகிறார்கள். இந்த தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா?, இங்கு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?, இங்கு மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?, ( விஜய்யின் கேள்விக்கு இல்லை என தவெகவின ஆர்ப்பரித்தனர்). மக்கள் பாதுகாப்பு மீது ஆளும் அரசுக்கு அக்கறையில்லை.

 

தன் குடும்பத்தின் சொத்தைப் பெருக்குவதிலேயேதான் அக்கறை. கொள்ளையடித்தப் பணத்திலிருந்து அவர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அதை, வாங்கிக் கொண்டு பதிலுக்கு அவர்கள் காதில் விசில் ஊதி அனுப்புங்கள். உங்கள் மகன், அண்ணன், தம்பி, பிள்ளை என நினைத்து எனக்கு வாக்களியுங்கள். எனக்கு ஒருமுறை வாக்களியுங்கள், வாய்ப்பு கொடுங்கள். நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும்.” இவ்வாறு விஜய் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்