ராணிப்பேட்டை மாவட்டம், பணப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி ஆலையை திறந்து வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “ராணிப்பேட்டை, பணப்பாக்கத்தில் டாடா வாகன உற்பத்தி ஆலை திறப்பு, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பொன்னான நாள். தமிழ்நாடு எந்த அளவுக்கு தொழில் செய்ய சிறந்த மாநிலம் என்பதற்கு இது சிறந்த உதாரணம். இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரம். மின் வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழகம்தான். ரூ.9 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. டாடாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆழ்ந்த பிணைப்பு உள்ளது. தமிழ்நாட்டின் தயாரிப்புகள் உலக தரத்தில் கிடைக்கும் என்பதற்கு உதாரணம்தான் இந்த ஆலை. சீரான, பரவலான அனைவரையும் உள்ளடக்கிய மாநிலம் தமிழ்நாடுதான். மற்ற மாநிலங்களுடன் போட்டி என்பதை தாண்டி, உலக நாடுகளுடன் போட்டியிடும் நிலையில் தமிழ்நாடு முன்னேறியுள்ளது. தமிழக அரசு உறுதி அளித்தால், எப்படி காப்பாற்றும் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். அரசின் செயல்பாடுகளை எடுத்துக்காட்டும் வகையில், முதலீடுகள் செயல்பாட்டு மாநாட்டை விரைவில் நடத்த உள்ளோம். ஏற்கெனவே நாம் லீடராக இருக்கும் துறையின் இன்னும் சாதனைகள் செய்ய வேண்டும். எங்கள் நிறுவனத்துக்கு வேலைவாய்ப்பு தர எந்த நிறுவனங்கள் முன்வந்தாலும் வரவேற்போம். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அனைத்து உதவிகளையும் செய்வோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.