தனியார் பள்ளிகளில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள உத்தரவில், “தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் மேற்கொண்டு தமிழ்நாடு அரசு அரசாணையாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 2018 (தமிழ்நாடு சட்டம் 35/2019) பிரிவு 57ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர் இதன்மூலம் தமிழ்நாட்டில் பின்வரும் திருத்தங்களைச் செய்துள்ளார். தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்குரிய கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவொரு பள்ளி வளாகமும், பள்ளி நேரத்திலோ அல்லது அதன் பின்னரோ, எந்தவொரு நிகழ்ச்சி, கூட்டம், பிரச்சாரம், அறிவுறுத்தல் அல்லது எந்தவொரு வெளிப்புற நபர், சங்கம் அல்லது அமைப்பின் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்பாடு செய்ய, நடத்த அல்லது எளிதாக்க பயன்படுத்தப்படக் கூடாது.
(i) அரசியல் அல்லது கருத்தியல்
(ii) வகுப்புவாத அல்லது பிரிவினைவாத, அல்லது
(iii) இல்லையெனில், பள்ளியின் கல்வி நோக்கங்களுடன் தொடர்பில்லாதது, கலாச்சார நிகழ்வுகள், சமூக சேவைத் திட்டங்கள், ரத்த தான முகாம்கள், நினைவு விழாக்கள் அல்லது இதுபோன்ற செயல்பாடுகள், அவை மதச்சார்பற்றவை, அரசியல் சாராதவை. கல்வி நிறுவனத்தின் நேரடி மேற்பார்வை மற்றும் பொறுப்பின் கீழ் நடத்தப்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் அரசாங்கத்தால் குறிப்பிடப்படும் தகுதி வாய்ந்த
அதிகாரியிடம் முன்அனுமதி பெற வேண்டும். இந்த துணை விதியின் நோக்கங்களுக்காக, “வகுப்புவாத அல்லது பிளவுபடுத்தும் செயல்பாடு என்பது மதம், இனம், சாதி, சமூகம், மொழி அல்லது சித்தாந்தத்தின் அடிப்படையில் மாணவர்களிடையே ஒற்றுமையின்மை, பகைமை, வெறுப்பு அல்லது வெறுப்பை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்ட அல்லது சாத்தியமான எந்தவொரு செயலையும் குறிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.மற்றும் சிறுபான்மை அமைப்புகள் பள்ளி வளாகங்களில் தொடர்ந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.