Rock Fort Times
Online News

விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்…!

விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக விண்வெளி சென்றனர். ஆனால், இருவரும் 9 மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர். இதற்கு காரணம் அவர் சென்ற ராக்கெட்தான். போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் இவர் சென்றார். இவருடன் அமெரிக்க விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் பயணித்தார். இருவரும் 10 நாட்களில் பூமிக்கு திரும்புவதுதான் திட்டம். ஆனால், திட்டத்தின்படி எதுவும் நடக்கவில்லை. குறிப்பாக அவர்களால் 10 நாட்களில் பூமிக்கு திரும்ப முடியவில்லை. காரணம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதுதான் என கூறப்பட்டது. விண்கலம் பூமியில் பத்திரமாக தரையிறங்க த்ரஸ்டர் எனப்படும் அமைப்பு பயன்படும். இந்த விண்கலத்தில் த்ரஸ்டரில்தான் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. பலரும் சுனிதாவையும், வில்மோரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர். இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. நான் ஜனாதிபதியானால் சுனிதா வில்லியம்ஸ்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டுவருவேன் என டிரம்ப் கூறியிருந்தார்.

அதேபோல, ஜனாதிபதியான பின்னர் சுனிதா வில்லியம்ஸை உடனடியாக மீட்க எலான் மஸ்க்குக்கு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மீட்பு பணிகள் வேகமடைந்தன. இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் வருகிற 16-ம் தேதி பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்து இருந்தது. இந்நிலையில், 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கி தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில்மோர் பூமி திரும்வுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.18 மணிக்கு புளோரிடாவில் இருந்து டிராகன் விண்கலத்துடன் சீறிபாய தயாராக இருந்த பால்கன் 9 ராக்கெட்டில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 மிஷன் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சுனிதாவை அழைத்து வரும் க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்று நாசா தெரிவித்துள்ளது. அதனை சரிசெய்யும் பணியில் விண்வெளி நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்