Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் அறுவடைக்கு காத்திருக்கும் செங்கரும்புகள்!

பொங்கல் பண்டிகைக்காகவும் சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்காகவும், மற்றும் கோவில் வழிபாடுகளுக்காகவும் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. எனவே, இதன்தேவை குறைவுதான் என்பதால் குறைந்த அளவில் தான் செங்கரும்பு சாகுபடி செய்யப்படும். தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெற்ற பிறகு ஆண்டுதோறும் செங்கரும்பு சாகுபடி இருமடங்காக உயர்ந்தது. இந்தாண்டும் திருச்சி மாவட்டத்தில் செங்கரும்பு அதிக எண்ணிக்கையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் என 14 ஒன்றியங்களிலும் பரவலாக ஆங்காங்கே அரை ஏக்கர் என்ற வகையில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் திருப்பைஞ்ஞீலி, மணப்பாறை வட்டத்தில் பாலக்குறிச்சி, அந்தநல்லூர் ஒன்றியத்தில் திருவளர்ச்சோலை, கிளிக்கூடு, மருங்காபுரி ஆகிய பகுதிகளில் தான் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் சுமார் 200 ஹெக்டேரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் கரும்புகள் என கணக்கிட்டாலும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கரும்புகள் விளைவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட வேளாண்மைத்துறையினர் கூறுகையில், மாவட்டத்தில் அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான தேவைக்கும் அதிகமாகவே செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரிடமும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 6 அடிக்கும் குறைவாகவும் 4 அடி, 5 அடி கரும்புகள் உள்ளன. அந்த விவசாயிகளிடம் 6 அடி உள்ள கரும்புகளுக்கு மட்டும் பணம் வழங்கி அவற்றை கொள்முதல் செய்யவுள்ளோம். மாவட்டத்தின் மொத்தத் தேவை 8.33 லட்சம் கரும்புகள் மட்டுமே. ஆனால், மூன்று மடங்குக்கு மேல் கரும்பு உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்தாலும் கொள்முதல் நடவடிக்கைகளுக்கு உதவிட தயாராகவுள்ளோம் என்றார்.

திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறையினர் கூறுகையில், 14 ஒன்றியங்களிலும் கரும்பு கொள்முதலுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனா். இக்குழுவினர்கள் , வட்டாரம் வாரியாக அந்தந்தப் பகுதியில் உள்ள கரும்புகளை கொள்முதல் செய்வர். கிராம நிர்வாக அலுவலர் மூலம் சான்று பெற்று, விவசாயிகளிடம் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று உடனடியாக அவரவர் வங்கிக் கணக்கில் கொள்முதல் தொகை வரவு வைக்கப்படும் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்