ஏழை மாணவர்களுக்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க கோரி திருச்சி முதன்மை கல்வி அலுவலகத்தை மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்…!
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச கல்வி வழங்கப்பட வேண்டும். ஆனால், 25 சதவீத இட ஒதுக்கீடுக்கான நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு, திட்டமிட்டு தமிழ் நாட்டிற்கான நிதியை விடுவிக்காமல் உள்ளது. இதனைக் கண்டித்தும், உடனடியாக கல்வி நிதியை விடுவிக்க கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர், திருச்சி மரக்கடை அருகே உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் அந்த அலுவலகம் அருகே நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் .பின்னர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Comments are closed.