ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சக்கரத்தாழ்வார், காட்டழகிய சிங்கப் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்… * வெள்ளிக் குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டது!
உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் ஜூலை 8-ந் தேதியும், ஸ்ரீரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 18-ந் தேதியும் நடைபெற்றது.அதனைதொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு இன்று( ஜூலை 25) ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7.15 மணியளவில் ஒரு புனிதநீர் குடம் யானை மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் 11 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க வடக்குவாசல் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதியை வந்தடைந்தனர். பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை இன்று மாலை நடைபெறுகிறது.
இதேபோல ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவானைக்காவல் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் இன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 8 மணியளவில், ஒரு புனித நீர் குடம் யானை மீது வைத்தும், 11 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க வடக்குவாசல், சித்திரை வீதிகள், ராஜகோபுரம் வழியாக காலை 9.30 மணியளவில் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லெஷ்மிநரசிம்மர் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லட்சுமிநரசிம்மர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெறுகிறது. பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெறுகிறது.
Comments are closed.