Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: போலீஸாரின் கடுமையான கெடுபிடியால் உள்ளூர் மக்கள் கடும் அவதி…! (வீடியோ இணைப்பு)

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை நடந்தது. இதில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீரங்கம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் கோவிலுக்கு அருகாமையில் உள்ள தெருக்களில் வசிக்கும் உள்ளூர் வாசிகளுக்கு கடும் நெருக்கடியை போலீசார் ஏற்படுத்திய வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அங்குள்ள வீடுகளுக்கு செல்பவர்கள் கூட வாகனத்தை எடுத்துச் செல்லக்கூடாது, வாகனத்தை தூரமாக நிறுத்தி விட்டு தான் செல்ல வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இதனால் உள்ளூர் வாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சொர்க்கவாசல் திறப்பு முக்கிய நிகழ்வாக இருந்தாலும்கூட உள்ளூர்வாசிகள் நெருக்கடிக்கு ஆளாவதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆகவே, உள்ளூர்வாசிகளுக்கு கெடுபிடி கொடுக்காமல் வாகனங்களை அனுமதிக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்