உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 26- ம் தேதி நடைபெறுகிறது, தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று(16-04-2025) சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது. கோவில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து தேரின் மீது முகூர்த்தக்கால் நட்டனர். இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், வெங்கடேசன் மற்றும் அர்ச்சகர்கள் பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தேர் முன்பாக முகூர்த்த காலுக்கு கோவில் யானை ஆண்டாள் மற்றும் லட்சுமி மரியாதை செய்தது. திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 26ம் தேதி காலை 5.15 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Comments are closed.