முகலாய மன்னர்களின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி 1ம் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூலை 14) ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. முன்னதாக வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அனைத்தும் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் ஒரு தட்டை யானை மீது வைத்தும் மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். இதையடுத்து வஸ்திர மரியாதை பொருட்களுடன் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு ஆடி முதல் தேதியன்று திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்து விட்டு ஸ்ரீரங்கம் திரும்புகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் சிவராம் குமார், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Comments are closed.