பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஜனவரி 19-ம் தேதி சிறப்பு மெமு ரயில் இயக்கம்…!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வெளியிடங்களில் தங்கி படித்து வரும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் அவரவர் சொந்த ஊர் சென்றுள்ளனர். அந்தவகையில் சுமார் 10 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் வருகிற திங்கட்கிழமை முதல் பணிக்கு செல்ல வேண்டி இருப்பதால் ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே, ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால், முன்பதிவு செய்யாதவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க தயாராகி வருகின்றன.
இந்தநிலையில், பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக முன்பதிவு இல்லாத மெமு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை புறநகர் ரயில்களைப் போன்ற இந்த மெமு ரயில், மதுரையில் இருந்து ஜனவரி 19-ந் தேதி மாலை 4 மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலில் இணைக்கப்படும் 8 ரயில் பெட்டிகள் அகலமான நுழைவு வாயில்கள், விசாலமான இடவசதி, கழிப்பறை வசதிகள் கொண்டவை. இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Comments are closed.