Rock Fort Times
Online News

கல்லணை கால்வாயில் மூழ்கி சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!*

தஞ்சாவூர், கல்லணை கால்வாயில் நாயை குளிப்பாட்ட சென்ற போது காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகேயுள்ள செவ்வப்ப நாயக்கன் ஏரிபகுதியைச் சேர்ந்தவர் பி.ராஜா(56). தமிழக காவல்துறையில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக , தஞ்சாவூர் பெரிய கோயிலில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் வீட்டில்வளர்க்கும் நாயைக் குளிப்பாட்டுவதற்காக மகன் ராகுல், மகள் லாவண்யாவுடன், வண்ணாரப்பேட்டை மானோஜிபட்டி பாலம் அருகே கல்லணைக் கால்வாய்க்கு நேற்று சென்றார். அங்கு ஆற்றில் நாயை ராகுல் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென நாய் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, அதைக் காப்பாற்றுவதற்கு மகன் ராகுல் முயன்றுள்ளார். அவரையும் தண்ணீர் இழுத்துச் சென்றதால் அதிர்ச்சியடைந்த ராஜா, மகனைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், கால்வாயில் நீரோட்டம் வேகமாக இருந்தால் ராஜா நீரில் அடித்துச் செல்லப்பட்டார். கரையில் இருந்த பொதுமக்கள் கால்வாயில் இறங்கி ராகுலையும், நாயையும் காப்பாற்றினர். ராஜாவை தஞ்சாவூர் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் தேடி வந்த நிலையில், கண்டிதம்பட்டு பகுதியில் ராஜாவின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்