தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள பள்ளிவாசல் தலைவர் முகமது காசிம்க்கு கொரியர் மூலம் மண்டை ஓடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு;
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே முகமது பந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம்,. இவர் அப்பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலின் ஜமாத் தலைவராக உள்ளார். இவருக்கு நேற்று முன்தினம் ( 03.05.2023 ) இரவு 7 மணிக்கு, கொரியர் மூலம், பெட்டி ஒன்று பார்சலாக வந்துள்ளது. அதில் முறையான அனுப்புநர் விலாசம் இல்லாமல் இருந்துள்ளது. சந்தேகத்துடன் பார்சலை வாங்கிய முகமது காசிம் பிரிக்காமல் வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் முகமது காசிம் மகன் முகமது மஹாதீர், பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அதில், மண்டை ஓடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து முகமது மஹாதிர் தனது தந்தை முகமது காசிமிடம் கூறினார். பின்னர், முகமது காசிம் திருவையாறு போலீசிக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு டி.எஸ்.பி. ராஜ்மோகன் பார்சலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கூரியரில், அனுப்புநர் பெயர் நவ்மன்பாய்கான் என இருந்தது. அதில் ஒரு மொபைல் எண்ணும் இருந்து, அந்த நம்பருக்கு போலீசார் தொடர்புக்கொண்டபோது, அந்த அழைப்பு வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவரின் எண் என தெரியவந்தது. மேலும், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவையாறு பள்ளிவாசல் தலைவருக்கு மண்டை ஓடு வந்த சம்பவம் தஞ்சை மண்டலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.