திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் இன்று( மே 6) நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார்.
துணை மேயர் திவ்யா தனக்கோடி முன்னிலை வகித்தார். இதில் துணை ஆணையர் பாலு, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெய நிர்மலா மற்றும் நகர் மன்ற அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், புத்தூர் ஈ.வி.ஆர். சாலை பகுதியில் 64.58 சதுர அடி பரப்பளவில் அரசு வழிகாட்டுதல் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் உருவச் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த இடத்தை அதன் உரிமையாளர்கள் மரகதம்,பூரணி , தரணி ஆகியோர் தானமாக மாநகராட்சி மேயர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். சிலை அமைத்தல் பராமரித்தலுக்கான முழு செலவையும் சிலை அமைக்க கோரும் மேயர் அன்பழகனே ஏற்றுக்கொள்ள வேண்டும். வெண்கலத்திலான சிலையை மட்டுமே அமைக்க வேண்டும். அதன் பின்னர் கலெக்டர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறை அனுமதியுடன் சிலை அமைப்பதற்கு அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.பின்னர் இந்த தீர்மானத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சுரேஷ் நன்றி தெரிவித்து பேசினார்.
அப்போது, முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் வருகிற 9-ந் தேதி திறந்து வைக்க உள்ள பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் அனைத்து கவுன்சிலர்களின் பெயர்கள் பொறித்த கல்வெட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் கவுன்சிலர் வக்கீல் கோவிந்தராஜன் பேசும்போது, விரைவாக சிவாஜி சிலையை அமைத்து முதல்வர் வருகிற 9-ந் தேதி திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர் ந.பிரபாகரன், திமுக கவுன்சிலர் நாகராஜ் உள்ளிட்டவர்கள் நன்றி தெரிவித்து பேசினர். ஏற்கனவே பாலக்கரை ரவுண்டானா பகுதியில் 2009 -ல் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக சிலை திறக்கப்படாமல் மூடப்பட்டு கிடந்தது.
பின்னர் மாநகராட்சி நிர்வாகம் அந்த சிலையினை இடமாற்றம் செய்து சோனா மீனா தியேட்டர் எதிரில் உள்ள ரவுண்டானாவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அங்கும் சிக்கல் ஏற்பட்டதால் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு புத்தூர் பகுதியில் தனிநபரின் இடத்தில் அமைக்கப்பட உள்ளது. அங்கு சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணி நாளை மாலைக்குள் முடிவடைந்து விடும்என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிலையை திருச்சிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.