Rock Fort Times
Online News

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை  வழக்கு : முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி…

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூன் 16ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ்தாஸ், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க ராஜேஷ் தாஸ் அவகாசம் கேட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டால் நியாயம் கிடைக்காது என்று கூறி வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். மேலும் வழக்கு விசாரணைக்காக ஜனவரி 12ம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக ராஜேஷ் தாசுக்கு உத்தரவிடப்படுகிறது. ஜனவரி 18ம் தேதி இறுதி விசாரணையை துவங்கி 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிடுகிறோம். ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க தடையில்லை என்று தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்