தமிழக அமைச்சரவையில் மின்சாரதுறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. சென்னையில் உள்ள இவரது வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள இவரது அறை மற்றும் இவரது சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்தநிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோர்ட் உத்தரவின்பேரில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் அவர் வகித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துசாமிக்கும், மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டார். இந்த அமைச்சரவை மாற்றம் தமிழக ஆளுநர் ஆர்.என. ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க அவர் மறுத்து வந்தார். இந்தநிலையில் அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் தங்கம் தென்னரசுவின் இலாகாக்களை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார். செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதால் அமைச்சராக தொடர முடியாது. குற்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவதால் தார்மீக அடிப்படையில் அவர் அமைச்சராக தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளுநர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்
Comments are closed, but trackbacks and pingbacks are open.