மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு மழை நின்றுள்ளதால் வெள்ளத்தை வடிய வைக்கும் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டு ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 8 லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் அனுப்பி வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் துரித நடவடிக்கைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டு திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பால் பவுடர் பாக்கெட்டுகள், உணவு பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், பாய்கள், துணிமணிகள், போர்வைகள், எவர் சில்வர் பாத்திரங்கள், நாப்கின்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரூ. 1கோடி மதிப்பில் 8 வாகனங்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.