சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தைப்பூச திருவிழா முன்னேற்பாடுகள் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
சக்தி தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை தைப்பூச விழா நடைபெறுகிறது. விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கலெக்டர் பேசியதாவது., சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச விழாவுக்கான கொடியேற்றம் பிப் 2ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக பிப்.10-ஆம் தேதி தெப்ப உற்சவமும், பிப். 11ம்தேதி கண்ணாடி பல்லக்கில் வீதி உலா. அரங்கநாதரிடம் சீர் வரிசை பெறுதல், தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்வுகளுடன் விமர்சையாக நடைபெறவுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் காவலர்களையும், போக்குவரத்தில் இடையூறு ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவலர்களை கூடுதலாக பணியமர்த்த வேண்டும். தைப்பூச திருவிழா நாளில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரை தேக்கவும், புள்ளம்பாடி மற்றும் பெருவளவாய்க்காலில் தண்ணீர் திறக்கவும், அம்மன் திருவீதி உலா வழித்தடங்களில் உள்ள மின் இணைப்புகளை முறைப்படுத்திட மின்வாரிய பணியாளர்கள் உடன் வரவும், பக்தர்கள் பாதுகாப்பிற்கு 108 முதலுதவி சிகிச்சை வாகனம், தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைக்கவும், பக்தர்களுக்கு பொதுமக்களால் வழங்கப்பட உள்ள அன்னதானத்தை கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறைக்கும் உத்தரவிட்டார்.மேலும், பக்தர்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர் மொபைல் கழிப்பறைகள் நிறுவ பேரூராட்சிக்கும், நால்ரோடு முதல் திருக்கோயில் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையையும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி,அறநிலையத் துறை இணை ஆணையர் கல்யாணி மற்றும் பல்வேறு துறை மாவட்ட நிலை அலுவலர்கள், அறநிலையத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.