திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர். அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கை பொருட்கள் அவ்வப்போது திறந்து எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி. இளங்கோவன், இணை ஆணையர் சி.கல்யாணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் ஆகியோர் மேற்பார்வையில் அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ரொக்கமாக 83 லட்சத்து 2 ஆயிரத்து 982 ரூபாயும், தங்கம் 2 கிலோ 827 கிராம், வெள்ளி 2 கிலோ 759 கிராம், 114 வெளிநாட்டு பணத்தாள்கள், 596 வெளிநாட்டு நாணயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
*

Comments are closed.