திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் மார்க்கெட் பகுதி கழகத்தின் சார்பாக தமிழக முதல்வர் மற்றும் கழகத் தலைவர் ஸ்டாலின் 70- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பகுதி செயலாளர் ஆர்.ஜி.பாபு தலைமையில் நடந்தது. திருச்சி கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மதிவாணன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, மாநகரக் கழக நிர்வாகிகள் சந்திரமோகன், செல்லையா , சரோஜினி, பகுதிகழகச் செயலாளர்கள் தர்மராஜ், நீலமேகம், மோகன், மணிவேல், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட கழக செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ராஜீவ் காந்தி , தலைமை கழக பேச்சாளர், ஈரோடு இறைவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கோட்டைக்கு நேரடியாக சென்று போட்ட முதல் கையெழுத்து கட்டணம் இல்லா மகளிர் பேருந்து. அந்த கையெழுத்துதான் முதல் கையெழுத்து என்று சொல்லும்போது இது மகளிருக்கான ஆட்சி என்பது மிக தெள்ளத் தெளிவாக தெரிகிறது. சமூக நீதியை பற்றி சொன்னால் இன்றைக்கும் நமக்கு இருக்கின்ற பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொன்னார்கள். நீதி கட்சியின் நீட்சியாக நீதி கட்சி தலைவரின் நீட்சியாக இன்றைக்கு ஒரு தலைவர் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவில் நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்பதை நாம் பெருமையோடு எடுத்துச் சொல்ல முடியும் . பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதற்கு முக்கிய காரணம், உரிமைத் தொகை வழங்கினீர்களா? வழங்கினீர்களா? என்று கேட்டவர்களுக்கு அதையும் அறிவு ஆசான் பிறந்த நாளாம் செப்டம்பர் 15-ந் தேதி 1000 ரூபாய் வழங்குவேன் என அறிவித்திருக்கின்றார் நம்முடைய முதலமைச்சர். பெண்களுக்கு பார்த்து பார்த்து செய்யக்கூடிய முதல்வர் .அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குகின்றவர் நம் முதல்வர் .எந்த சமுதாயத்தில் பெண்கள் முன்னேறுகிறார்களோ அந்த சமுதாயம் வளர்ந்த சமுதாயம் என நம்புகிறவர்கள் நாங்கள் இவ்வாறு அவர் பேசினார்.
