Rock Fort Times
Online News

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் லூர்து பிரான்சிஸ் (வயது 53) என்பவரை இன்று மதியம் அவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தலை மற்றும் கைகளில் பலத்த காயமுற்ற லூர்து பிரான்சிஸ் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரைத் தாக்கிய இரு நபர்களில் ராமசுப்பு என்பவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையின்படி, ராமசுப்புவின் மீது லூர்து பிரான்சிஸ், அளித்த புகாரின் பேரில், கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியதாகத் தெரிய வருகிறது. இதுகுறித்து, காவல் துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் பணியிலிருக்கும்போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தினை அளித்துள்ளது. தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது. இக்கொடிய சம்பவத்தில் உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் அவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், லூர்து பிரான்சின் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்