Rock Fort Times
Online News

புகார் ஏற்க மறுப்பு : லால்குடி சிறை காவலர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை சோழமுத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் 45 வயதான ராஜா. இவர் லால்குடி கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய தம்பி நிர்மல்.இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே இட பிரச்சினை மற்றும் குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் முத்துவுக்கும் முதல்நிலை தலைமை காவலர் ராஜாவுக்கும் நிலப் பிரச்சனையில் ஏற்பட்ட அடிதடி சம்பந்தமாக கொடுத்த புகாரின் பேரில் ராஜா மீது வழக்கு பதியப்பட்டு கடந்த 18 -6 -2021 ந்தேதி பணி இடை நீக்கம் செய்து அன்றிலிருந்து இன்று வரை பணியிடை நீக்கத்தில் இருந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 25 ம் தேதி ராஜாவின் மனைவி விஜயாவை அவரது தம்பி நிர்மல் மதுபோதையில் திட்டி உள்ளார். இது சம்பந்தமாக இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் லால்குடி காவல்நிலையத்தில் ராஜாவின் மனைவி விஜயா மற்றும் நிர்மல் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் மனு ரசீது போட்டுள்ளனர். இந்த புகார் சம்பந்தமாக நேற்று விசாரணைக்கு வந்த ராஜாவை லால்குடி காவல் நிலையத்தில் இருந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சிறைத்துறை முதல்நிலை காவலர் ராஜாவை நாற்காலியோடு எட்டி உதைத்ததாகவும், விசாரணையில் ஒருதலைப் பட்சமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அவர் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் நேற்று அண்ணன் தம்பிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிக்க லால்குடி காவல் நிலையத்திற்கு முதல் நிலைக் காவலர் ராஜா வந்துள்ளார். பின்னர் திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீக்காயங்களுடன் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லால்குடி காவல் நிலையத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
இன்று காலை சிகிச்சை பெற்று வந்த ராஜா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அவரது உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கூட்டம் கூடியதால் மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் எஸ்.ஐஆக பணிபுரிந்து வந்த பொற்செழியன் பணிஇடை நீக்கம் செய்து திருச்சி மண்டல காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்