சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி, சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கியாஸ், பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகிறது. பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கியாஸ் விலையை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை தொடந்து உயர்ந்து வந்தது. பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு மார்ச் மாதம் மீண்டும் விலை உயர்ந்தது. இந்நிலையில், ஏப்ரல்1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நேற்று ரூ.1,965க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50 -க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.818.50க்கு விற்பனையாகிறது.

Comments are closed.