வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருளை பயன்படுத்தி வாக்கு திருட்டு நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், இன்று(18-09-2025) ஹைட்ரஜன் குண்டை வீசப்போவதாக கூறியிருந்தார். அதன்படி, இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கால் சென்டர்கள், மென்பொருள் உதவியுடன் ஓட்டு திருட்டு நடந்ததாகக் குற்றம்சாட்டினார். மேலும், ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்களை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் காப்பாற்ற நினைப்பதாகவும் அவர் புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கிளப்பியுள்ள புகார்கள் தவறானவை. அடிப்படை ஆதாரமற்றவை. ஆன்லைன் மூலமாக எந்தவொரு வாக்காளரின் ஓட்டும் நீக்கப்படவில்லை. அப்படி ராகுல் கூறியது தவறு. பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், எந்தவொரு ஓட்டும் நீக்கப்படமாட்டாது. 2023ம் ஆண்டு ஆலந்த் தொகுதியில் சில வாக்காளர்களின் ஓட்டுக்களை நீக்குவதற்கு நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த புகார்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் 2018ம் ஆண்டு பாஜவின் சுபாத் குத்தேதாரும், 2023ல் காங்கிரஸ் கட்சியின் பிஆர் பாட்டிலும் வெற்றி பெற்றுள்ளனர், இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.