Rock Fort Times
Online News

மனு கொடுக்கும் போராட்டத்தின்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் – போலீசாரிடையே தள்ளுமுள்ளு…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் சார்பில் அந்த பகுதியிலேயே அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும், திருச்சி பஞ்சப்பூர், பிராட்டியூர் பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகர் அபிஷேகபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று(27-10-2023) நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக பேரணியாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கும்பலாக செல்ல வேண்டாம் முக்கிய நிர்வாகிகள் மட்டும் மனு கொடுக்க செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், கட்சியினர் முண்டியடித்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்றனர். இதன் காரணமாக போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அவர்களிடம் மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதை அடுத்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்