அரசு இடமாற்றம் செய்த டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உச்சிப்புளி அருகே நொச்சியூரணியில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்து, மண்டபம் ரயில்வே பீடர் ரோட்டில் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. நேற்று முன்தினம் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டபம் கிழக்கு மண்டல முன்னாள் தலைவர் பாஜக நிர்வாகி கே.கதிரவன், தவ்ஹீத் ஜமாத் மண்டபம் கிளை செயலர் அஜ்மல் கான் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மண்டபம் எஸ்.ஐ கோட்டைச்சாமி புகாரளித்தார். இதனடிப்படையில், 30 பெண்கள் உள்பட 120 பேர் மீது 2 பிரிவுகளின்கீழ் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.