நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் பாமக (அன்புமணி அணி) அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில், இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்றாலும், பாஜகவுக்கான தொகுதிகள் குறித்து தலைவர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்தநிலையில் அதிமுக- பாஜக கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். திருச்சியில் 11-ந் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரதமர் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேச இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.