மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகிறார். “ஒரே பாரதம் – உன்னத பாரதம்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில், முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில், எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினரும் இதில் பங்கேற்றனர். இந்தப் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, “இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கினார். மோடி பேசியதாவது: தமிழர் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும், வேளாண்மையைப் போற்றுவதையும் வெளிப்படுத்தும் சிறப்பான பண்டிகை பொங்கல். வேளாண்மையை போற்றும் பண்டிகைதான் பொங்கல். பொங்கல் பண்டிகையை சர்வதேச திருவிழாவாகக் கொண்டாடுவது அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் மக்களுடன் பொங்கலைக் கொண்டாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழ் கலாசாரத்தில் உழவர்களே வாழ்வின் ஆதாரம் என்று போற்றப்படுகிறார்கள். தமிழர் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும், வேளாண்மையைப் போற்றுவத பிரதிபலிக்கும் பண்டிகைதான் பொங்கல். பொங்கல் இன்று ஒரு உலகளாவிய விழாவாக மாறியுள்ளது. தமிழர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆழமான தொடர்பை வெளிப்படுத்தும் திருக்குறள் இருந்துள்ளது” என்று அவர் பேசினார்.

Comments are closed.