Rock Fort Times
Online News

பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளை மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாவட்டத் தலைவர் சேவியர் பால்ராஜ் தலைமை வகித்தார். சிவகுமார், கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளரும், மாநில பொருளாளருமான நீலகண்டன் வரவேற்று, தீர்மானங்களை விளக்கிப் பேசினார். பொதுச் செயலாளர் முத்துராமசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆசிரியர்கள் கோரிக்கை மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். கூட்டத்தில்,  ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக தமிழக முதல்வர் நிறைவேற்றி ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பணி மாறுதல் என்ற போர்வையில் பந்தாடுவதை நிறுத்தி முறையாக வருகிற மே மாதம் உபரியாக உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை கலந்தாய்வு நடத்தி அவர்களது பணியை உறுதி செய்ய வேண்டும், ஏப்ரல் 15 ம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை முடித்து மாவட்ட அமைப்பில் ஒப்படைப்பது, வட்டார தணிக்கையை மாவட்ட தலைவர் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர்கள் தலைமையில் மேற்கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வட்டாரச் செயலாளர்கள் அமல் சேசுராஜ், சுரேஷ் ராஜ், தேவகி, மணி பாரதி,  மாவட்ட துணை செயலாளர் பெர்ஜித் ராஜன், ஐசக் டேவிட் அருள்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்