துறையூர் அருகே ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை தட்டி தூக்கிய காவல்துறை…!
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கொப்பம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் செந்தில். இவர், உப்பிலியபுரம் பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வந்தார்.சம்பவத்தன்று இவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து செந்திலின் மனைவி அனிதா, உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் செந்திலை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் துறையூர் அருகே உள்ள சிறுநத்தம் பகுதியில் பாலத்தின் அடியில் அவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் துறையூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிணமாகக் கிடந்த செந்தில், கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட அடையாளங்களும், உடலில் காயங்களும் இருந்தன .அதன் அடிப்படையில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்தநிலையில் லால்குடி தாலுக்கா, சிறுகனூர் அருகே உள்ள ரெட்டி மாங்குடி பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் செந்திலை கொலை செய்து சடலத்தை சிறுநத்தம் பாலத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார். அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.