Rock Fort Times
Online News

கஞ்சா கடத்தல் காரர்களுடன் தொடர்பு:-திருச்சியில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் “டிஸ்மிஸ்”…!

 திருச்சி மாவட்டம், காணகிளியநல்லூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த பெரியசாமி தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை காவல்துறை பணியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமி கடந்த 05.11.2020 முதல் 24.04.2022 வரை நாகப்பட்டினம் நகர காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது கீச்சாங்குப்பம் கடற்கரை பழைய மீன்பிடி துறைமுகத்தில் படகில் 400 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலையில் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தனிப்படை உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு 5 பேரை கைது செய்தனர். மேலும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த 5 பேரில் 5வது நபரான சிலம்பு செல்வன் என்பவர் கஞ்சா கடத்தலுக்கு மூளையாக இருந்துள்ளார். அவரை முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்ககாமல் ஆய்வாளர் இருந்துள்ளார்.அதோடு அவருக்கு சொந்தமான படகுகள், மற்றும் இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி இந்த குற்ற வழக்கிற்கு ஆதரவாக சாட்சியங்கள் மற்றும் தடயங்களை சேகரிக்காமலும் சிலம்புசெல்வனை இக்குற்ற வழக்கிலிருந்து காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளார். மேலும் குற்ற வழக்கு தொடர்பாக பெரியசாமி தனது கடமையிலிருந்து தவறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர்களது வங்கி கணக்குகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்களை முடக்குவது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் எதிரிகளுக்கு சாதகமாக செயல்படும் வகையில் நடந்து கொண்டு தனது கடமையிலிருந்து ஆய்வாளர் தவறியுள்ளார்.மேலும், வழக்கின் எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் எதிரிகளுக்கு சாதகமாக செயல்படும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.கஞ்சா போதைப்பொருள் 20 கிலோ கிராமிற்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகள் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றுவது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் 400 கிலோகிராம் கஞ்சா பிடிபட்டது தெரிந்திருந்தும் மேற்படி தலைமை அலுவலக அறிவுரை படி போதை பொருள் நுண்ணறிவு பிரிவிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை ஏதும் தொடராமல் இருந்து தனது கடமையிலிருந்து தவறியுள்ளார்.  கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஆபரேசன் கஞ்சா வேட்டை 20 மூலம் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கடத்தல் காரரோடு ஆய்வாளர் சீருடையில் தனியார் விடுதியில் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடும் புகைப்படமானது தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி பொது மக்கள் மத்தியில் காவல்துறையின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் நடந்துள்ளார். ஆகவே, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் அறிவுரைப்படி சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் காவல் பணியில் இருந்து முழுமையாக நீக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்