திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்த சிங்கமுத்து மனைவி கீதா (வயது 45). இவர் ஆவண எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். குமார் பதிவு செய்த வீட்டுமனை, தனக்கு சொந்தமானது என்று சுந்தரம் புகார் அளித்ததின் பேரில் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு குமார் மற்றும் 8 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பத்திர எழுத்தர் கீதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் 2021-ம் ஆண்டே கீதாவிடம் விசாரித்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கீதாவை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்திய திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆல்பர்ட் ( 53), உன் மீது குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமலும் மேற்படி வழக்கிலிருந்து விடுவிப்பதற்கும் தனக்கு ஒரு லட்சம், ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டுமென மிரட்டியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கீதா, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று ( 15.09.23 ) மாலை 3 மணியளவில் டிஎஸ்பி ஆல்பர்ட், கீதாவிடம் இருந்து ஒரு லட்சம் லஞ்ச பணத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் டிஎஸ்பி ஆல்பர்ட்டை கைது செய்தனர். பின் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.