திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட இனாம்குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு, காலை 9 மணி வரை மருத்துவர்கள் வராததால், காத்திருந்த நோயாளிகள் ஆத்திரமடைந்தனர். நோயாளிகள் மருத்துவமனை முன்பு திடீர்போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்களோடு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனைக்கு உரிய நேரத்திற்கு வராமல் அலட்சியப்படுத்தும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர் என்று கூறினா். இதுகுறித்து இனாம் குளத்தூர் காவல்துறை ஆய்வாளர் வீரமணி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். சம்பவ இடத்திற்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி விரைந்து வந்து தர்ணா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு அது குறித்து தொலைபேசியில்அதிகாரிகளிடமும் பேசினார்.கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர். இதனால் அந்த இடத்தில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.
