திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரால் பயணிகள் கடும் அவதி…! ( வீடியோ இணைப்பு)
இந்திய அளவில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் விசாலமானது. இங்கு 7 நடைமேடைகள் உள்ளன. இந்த நடைமேடைகளுக்கு செல்ல சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதை வழியாக பயணிகள் இறங்கி சென்று 2 முதல் 7வது நடைமேடைகளை அடைகின்றனர். முதியவர்கள் மற்றும் நோயாளிகள் நலன் கருதி நகரும் படிக்கட்டுகளும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களது ஊர்களுக்கு சென்று வருகின்றனர். மேலும், திருச்சியில் இருந்து பக்கத்து மாவட்டங்களான தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் ஊழியர்களும் சென்று வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. முக்கிய சாலைகள், ரயில்வே சுரங்கப் பாதைகளும் மழை நீரால் நிரம்பி உள்ளன. அதுபோல, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடைக்கு நடந்து செல்லும் சுரங்கப் பாதையில் ஒரு அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இந்த மழைநீரில் இறங்கி தான் மிகவும் சிரமத்துடன் ரயில் பயணிகள் தங்களது இருப்பிடங்களுக்கு சென்று வருகின்றனர். ஆகவே, மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.