பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ( 09.01.2024 ) நடைபெற்றது. கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலின்போது மேற்கொள்ள வேண்டிய கள பணிகள், தொண்டர்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். வேட்பாளர்களை தேர்வுசெய்து வையுங்கள்; கூட்டணி முடிவானதும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அளிக்க வேண்டும். தேர்தல் பணிகளை அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும். நிர்வாகிகளுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை உடனடியாக களைய வேண்டும். கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமாக செயல்பட வேண்டும். மாற்றுக் கட்சியில் உள்ளவர்களை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக கவனம் செலுத்தி கட்சியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அதிமுக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும், இன்று மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் மாவட்ட செயலாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.