கரூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு கரூர் மட்டுமல்லாமல் திருச்சி, தொட்டியம், முசிறி போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். கல்லூரி சார்பில் மாணவர்களுக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்த மாணவர் நிதிஷ்குமார் (வயது 19) 3-ம் ஆண்டும், தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவர் அண்ணாமலை முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். வழக்கம்போல இன்று ( 27.11.2023 ) காலை இந்த 2 மாணவர்களும் சக மாணவ, மாணவிகளுடன் கல்லூரிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்த போது அண்ணாமலைக்கும், நிதிஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இருவரும் கைகளால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். சக மாணவர்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை. அப்போது ஆத்திரம் அடைந்த அண்ணாமலை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிதிஷ்குமாரின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்தம் பீறிட்டு நிதீஷ்குமார் அலறிதுடித்தபடி கீழே சாய்ந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார். அங்கு நிதிஷ்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணாமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி பேருந்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.