Rock Fort Times
Online News

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை பிரிவு- சொல்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்…!

புதுக்கோட்டையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அனைத்துத் தரப்பினருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுகிறது. மருந்து மாத்திரைகள் அனைவருக்கும் ஒன்றுதான். பொதுவார்டில் இருக்க விரும்பாதவர்களுக்கு, அவர்களின் தனியுரிமை வசதிக்காக கட்டணம் பெறப்பட்டு அறை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 29,771 மருத்துவப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்ஸி, எம்ஆர்பி, என்எச்எம் மற்றும் மாவட்ட மருத்துவச் சங்கம் ஆகியவற்றின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். 43,155 மருத்துவப் பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடுத்த 2026ம் ஆண்டில் ஏற்படப்போகும் காலிப்பணியிடங்களுக்கும் சேர்த்தே 2,642 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொருத்தவரை இப்போது மருத்துவர்கள் எண்ணிக்கை கூடுதலாகத்தான் இருக்கிறது. பணி நியமன ஆணைகளை பெற்றவர்கள் 3 மாதங்களுக்குள் பணியில் சேரவில்லை என்றால் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் வராதபட்சத்தில் எம்ஆர்பி தேர்வில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் வந்தோருக்கு பணி ஆணைகள் வழங்கப்படும். கொரோனாவை பொருத்தவரை தமிழ்நாட்டில் வீரியம் குறைந்த ஒமைக்ரான் தொற்று தான் உள்ளது. எனவே, அச்சப்பட வேண்டியதில்லை. இணை நோய்கள் இருப்போர், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தோர், கருவுற்ற பெண்கள், முதியோர் மட்டும் முகக்கவசம் அணியலாம். தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகள் அதிகரிப்பு மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சேவையால் அரசு மருத்துமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்